மாற்றான் ரீ ஷூட்டிங் கே.வி.ஆனந்த் திட்டம்

Saturday 19 November 2011

கலைஞரை சந்திப்பேன்... -கவிஞர் வாலி பதில்


கை தராசை வைத்துக் கொண்டு யானையை எடை போட்ட கதையாகதான் இருக்கும் கவிஞர் வாலியின் சினிமா அனுபவங்களை சில வாரங்களில் தொகுத்தளிக்கிற முடிவும். ஆனாலும் அப்படி ஒரு இனிய ரிஸ்க்கை எடுக்க துணிந்திருக்கிறார்கள் வசந்த் டி.வியும் சாதக பறவைகள் சங்கரும். இந்நிகழ்ச்சியின் நிர்வாக தயாரிப்பாளர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி.
வாலி 1000 என்ற தலைப்பில் கவிஞர் வாலி பற்றிய இனிமையான நிகழ்ச்சியைVaaliவழங்கவிருக்கிறார்கள் இவர்கள். இந்த நிகழ்ச்சி பாடலை பெற்ற ஸ்தலம், கோலிவுட்-வாலிவுட், நினைவோ ஒரு பறவை, உன்னால் முடியும் தோழா, காஃபி வித் கவிஞர் என்ற ஐந்து பிரிவாக ஒளிபரப்பாகவிருக்கிறது.
ஏ.வி.எம் சரவணன், எஸ்பி.முத்துராமன், இயக்குனர் மகேந்திரன், எம்.எஸ்.விஸ்வநாதன், இசையமைப்பாளர் தேவா, எஸ்.ஜே.சூர்யா, டைரக்டர் கதிர், எல்.ஆர்.ஈஸ்வரி, குஷ்பு உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்களை சந்திக்க வைத்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை எடுத்து முடித்துவிட்டார்களாம். இது குறித்து பத்திரிகையாளர்களிடம் தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டார் கவிஞர் வாலி.
பல்வேறு திரையுலக பிரமுகர்களை இந்த நிகழ்ச்சியின் மூலம் சந்திக்கிறீர்கள், கலைஞரையும் சந்திப்பீர்களா என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது.
நான் அழைத்தால் கலைஞர் வர மாட்டேன் என்று சொல்ல மாட்டார். எனக்கும் அவருக்கும் நாற்பத்தைந்து கால நட்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு யாரையும் நான் இதுவரை அழைக்கவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் அழைத்திருக்கிறார்கள். நிச்சயம் கலைஞரை நான் சந்திப்பேன் என்றார் வாலி.
ஆட்சி மாறியதும் 'ரங்கநாயகி' என்றெல்லாம் கவிதை எழுதுகிறீர்களே, அந்தகால புலவர்கள் மாதிரி அரசவையை இடித்துரைக்க முடியாதா உங்களால்? இது இன்னொரு கேள்வி.
இலங்கை பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தை பாராட்டி அந்த கவிதையை எழுதினேன். ஆனால் நான்தான் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது பார்வதியம்மாளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழ்நாட்டில் அனுமதி மறுத்ததை கண்டித்தும் கவிதை எழுதினேன். அந்த கவிதையை பாராட்டி நிறைய பேர் பேசினார்கள். வைகோ கூட அதை தன் சங்கொலி பத்திரிகையில் வெளியிடவா என்று அனுமதி கேட்டு வெளியிட்டார். சமீபத்தில் தீக்குளித்த செங்கொடி பற்றியும் கவிதை எழுதியிருக்கிறேன். நாட்டில் நடக்கிற அன்றாட பிரச்சனைகள் பற்றி எழுதிக் கொண்டிருந்தால் அதை தவிர வேறு வேலை எதுவும் செய்ய முடியாது என்று இந்த கேள்விக்கு சற்று விரிவாகவும் சூடாகவும் பதிலளித்தார் வாலி.

No comments:

Post a Comment